பாலஸ்தீன அகதிகள் நலனுக்கான ஐ.நா. அமைப்புக்கு ரூ.21 கோடி நன்கொடை வழங்கியது இந்தியா

பாலஸ்தீன அகதிகள் நலனுக்கான ஐ.நா. அமைப்புக்கு இந்தியா ரூ.21 கோடி நன்கொடை வழங்கி உள்ளது.

பாலஸ்தீன அகதிகளுக்கு நிவாரணப் பணிகளை மேற் கொள்வதற்காக கடந்த 1950-ம் ஆண்டு முதல் ஐ.நா. அமைப்பு (யுஎன்ஆர்டபிள்யுஏ) செயல்பட்டு வருகிறது. ஜோர்டான், லெபனான், சிரியா, மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலம் மற்றும் காசா ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 56 லட்சம் பாலஸ்தீன அகதிகள் இந்த ஐ.நா. அமைப்பில் பதிவு செய்து கொண்டுள்ளனர்.

இந்த அமைப்புக்கு ஐ.நா. உறுப்பு நாடுகள் ஆண்டுதோறும் நன்கொடை வழங்கி வருகின்றன. இந்த நிதி, அகதிகளின் கல்வி, சுகாதாரம், நிவாரணம் மற்றும் சமூக சேவைப் பணிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது

இந்நிலையில், அந்த அமைப்புக்கு 2023-24-ம் ஆண்டில் வழங்க வேண்டிய ரூ.42 கோடியில் ரூ.21 கோடியை கடந்த 20-ம்தேதி இந்தியா வழங்கியது. இதற்கான காசோலையை ஜெருசலம் நகரில் உள்ள ஐ.நா. அமைப்பின் அலுவலகத்தில் அதன் வெளியுறவுத் துறை இயக்குநர் கரிம் அமரிடம் பாலஸ்தீனத்துக்கான இந்திய பிரதிநிதி ரேணு யாதவ் வழங்கினார்.

இதுகுறித்து ரேணு யாதவ்கூறும்போது, “இந்த பிராந்தியத்தில் ஐ.நா. அமைப்பு மேற்கொண்டு வரும் செயல்கள் மற்றும் பாலஸ்தீன அகதிகளுக்கு வழங்கி வரும் சேவைகளுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும்” என்றார்.

இதுகுறித்து யுஎன்ஆர்டபிள்யுஏ செய்தித் தொடர்பாளர் தாமரா அல்ரிபாய் கூறும்போது, “இந்தியாவின் நன்கொடையை பெற்றுக் கொண்டோம். காசா பகுதியில் சண்டை நடைபெற்று வரும் இந்த இக்கட்டான தருணத்தில் இந்தியா நிதியுதவி வழங்கியது மிகவும் வரவேற்கத்தக்கது” என்றார்.

கடந்த அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காசா பகுதியைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசா பகுதியில் வசிக்கும் 23 லட்சம் பேரில் 3-ல் 2 பங்கு மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர். அவ்வாறு புலம் பெயர்ந்தவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்ய முடியாமல் ஐ.நா. அமைப்பு திணறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 19-ம் தேதி பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் 32 டன் நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பி வைத்தது. மேலும் ஐ.நா. அமைப்புக்கு இந்தியா கடந்த 2018-ம் ஆண்டு முதல் இதுவரை ரூ.229 கோடி நிதியுதவி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018-ம் ஆண்டு பாலஸ்தீனத்துக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா. அமைப்புக்கான வருடாந்திர நிதியுதவியை ரூ.10.4கோடியிலிருந்து ரூ.42 கோடியாக அதிகரிக்க உத்தரவிட்டார். இதுபோல பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்புக்கு வழங்கும் வருடாந்திர நிதியுதவியை மற்ற நாடுகளும் அதிகரிக்க வேண்டும் என அப்போது இந்தியா சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

-ht