வானுறைந்த வரகவி நீவாழி – குமரன் வேலு

எதுகை மோனை இலக்கணத்தில்

எழுதி எழுதிச் சிவந்தகைகள்

அதிகம் தமிழை ஆய்ந்தாய்ந்தே

ஆதன் தன்னை இனித்தமெய்கள்

சதிகள் செய்யாத் தங்ககைகள்

தமிழுக் காக வாழ்ந்ததிங்கே

விதிகள் செய்த கோலத்தாலே

விரைவாய் உலகை நீத்ததின்றே!

 

சீனி நைனா எனச்சொன்னால்

தேனும் தமிழும் உவமைவரும்

தேனிப் போல தேந்தமிழைத்

தேடிச் செல்லும் அவரின்குணம்

ஆனிப் பொன்போல் கவிதைதரும்

அவரின் கவிதை ஞானம்தரும்

வானில் எங்கோ இருந்தாலும்

வாழ்த்தும் மழைபோல் தமிழைமனம்!

 

கையும் மெய்யும் தமிழுக்காய்க்

கடமை யாற்றக் கழனியிலே

பெய்யும் மழைபோல் தமிழ்வேரை

மெய்யாய் வளர்க்கத் தலைப்பட்டீர்

உய்யும் வழியைத் தமிழ்த்தரவே

உலகை விட்டு மறைந்தனையோ

வையம் வாழ்த்தும் வரகவியே

வணங்கு கின்றோம் சீனிஐயா!


‘தொல்காப்பிய ஞாயிறு’, ‘இறையருட்கவிஞர்’ ஐயா செ. சீனி நைனா முகம்மது அவர்களின் 7-ஆம் ஆண்டு நினைவேந்தலை ஒட்டி, இந்தச் சிறப்புக் கவிதை வெளியிடப்படுகிறது.