இவரல்லவோ தமிழறிஞர் – விஷ்ணுதாசன்

இவரல்லவோ தமிழறிஞர் – விஷ்ணுதாசன்

தமிழ் படித்தோர் பிழை பொறுப்பார்
தரமிலா சொல் கூறார் வஞ்சியார்
தயாள குணமுடையார்
சேவை மனமுடையார்
தளராத உடலுடையார்
தன்மானமுடையார் அறம் பிறழார்!

ஆன்றோரை பணிவார்
அடிமை வெறுப்பார்
சான்றோரை கூடி சாதகம் புரிவார்
அறிவுக்கடல் குளித்து
ஆழ்கடல் முத்தெடுத்து
அன்னை தமிழுக்கு அணி சேர்ப்பார்!

அச்சமறியார் பாரபட்சமறியார்
புறம்பேச அறியார்
இச்சகத்தில் அழிவிலா இலக்கியம் சமைத்து
இடுக்கண் அகம்புறம்
வாராமல் காப்பார்!
இளமையில் முதுமை
விரும்பி ஏற்பார்!

மரணத்தை அழைப்பார்
அணைப்பார் ரசிப்பார்
மாளாத காவியம்
மக்களுக்கு அளிப்பார்
மணப்பார் மனதில் விதைப்பார்
முளைப்பார் நினைவில்
திளைப்பார் என்றென்றும்
தீங்கிலா தமிழில் தனை மறப்பார்!