தமிழ்மொழிக் காப்பகத்தை வைத்து அரசியல் செய்வதை நிறுத்திக்கொள்ளுங்கள்!

மலேசிய வரலாற்றில் முதன் முதலாக, தமிழ்மொழியை மேம்படுத்துவதற்குக் கல்வி அமைச்சு அறிந்தேற்புடன் தமிழ்மொழிக் காப்பகத்தை மே 3, 2019-ல், முந்தையத் துணைக் கல்வி அமைச்சர் தியோ நி சிங்-ல்அதிகாரப்பூர்வமாகத் தொடக்கிவைக்கப்பட்டது.

இக்காப்பகம் தமிழ்மொழியை எல்லாக்கோணங்களிலும் தரப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது என்பதனை அறிந்து மலேசியத் தமிழர்கள் எல்லை இல்லா மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், இன்றையத் துணைக் கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரி திரு குணசீலன் நரசம்பு, தேசியக் கூட்டணி அரசாங்கம் தமிழ்மொழிக் காப்பகத்தை அறிந்தேற்கவில்லை என்று நாளிதழ் அறிக்கையின் மூலமாக மலேசியத் தமிழர்கள் தலையில் இடியை இறக்குகிறார்.

ஆட்சி மாறினாலும், சீன மொழிக் காப்பகம் ஒதுக்கப்படவில்லை, மாறாக மேலும் வலுப்படுத்தினார்கள். அதுதான், அவர்களின் மொழிப்பற்று. அக்காப்பகம் கௌரவத் தலைவராகக் கல்வித் துணையமைச்சரே பொறுப்பேற்பார். இதுவரை அம்மரபே பின் தொடரப்படுகிறது. இன்றையக் கல்வித் துணையமைச்சரே சீன மொழிக் காப்பகத்திற்கு தலைவர். ஆனால், தமிழ்மொழிக் காப்பகத்திற்கும் மட்டும் ஏன் இந்தவிதி விலக்கு?

தமிழ்மொழி அல்லது அதன் தலைமைத்துவத்தின் மீதான காற்புணர்ச்சியினால், தமிழ்மொழிக் காப்பகத்தைக் குழித்தோண்டி புதைக்கமுற்படுகிறார்களா? தமிழ்மொழிக் காப்பகத்தை வைத்து அரசியல் செய்வதை இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள். இதற்கு முன் இயங்கியதுப்போல, தமிழ்மொழிக் காப்பகம் கல்வி அமைச்சு அறிந்தேற்புடன் செயல்பட வேண்டும் என்பதே மலேசியத் தமிழர்களின் எதிர்ப்பார்ப்பு.

தமிழகரன்
தமிழகரன்

‘பொங்கலே புத்தாண்டு’ என்று கையேடு தயாரித்தது தான் சிக்கல் என்றால்,(http://tamilmozhikaappagam.org/wp-content/uploads/2021/01/pongal.pdf) தமிழ்மொழிக் காப்பகத்துடன் கலந்துப்பேசுங்கள், அதைவிடுத்து கீழறப்பு செய்யாதீர்கள். பொங்கலுக்கு இந்து அமைப்புகளினால் மதச் சாயம் பூசி, பள்ளிகளில் பொங்கல்  கொண்டாட்டத்திற்குக் கல்வி அமைச்சு தடைவிதித்தப்போது, மீட்டெடுக்க இங்கு ஒருவர் கூட முன்வரவில்லை.

ஆனால், தமிழ்மொழிக் காப்பகம் தானாக முன் வந்து பொங்கல் என்பது பண்பாட்டு பெருவிழா, சமயத்திற்கும், மதத்திற்கும் தொடர்பில்லை என்று விளக்கி கையேடுகளைத் தயாரித்திருக்கிறது என்றுஅறிகிறோம். அது இங்கு பலருக்குப்பொறுக்கவில்லை. திரு குணசீலன் தன் அறிக்கையில் பொங்கல் தமிழ்ப்புத்தாண்டா? என்று முடிவெடுக்கும் அதிகாரம் இந்துச் சங்கமும் இன்னும் பிற இயக்கங்களுக்குத்தான் இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பொங்கலும் தமிழ்ப்புத்தாண்டும் பண்பாடு நிகழ்வுகளாகும். ஆனால், ஒரு மதம் சார்ந்த இந்துச் சங்கம் முடிவெடுக்கும் என்று கூறும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது என்று கல்வித் துணையமைச்சரின் சிறப்பு உதவியாளரான திரு குணசீலன் விளக்க வேஎண்டும் என்று மலேசியத் தமிழர் எழுச்சி இயக்கம் கேட்டுக்கொள்கிறது.

அதோடு, மலேசியத் தமிழ்மொழிக் காப்பகத்திற்கு இடையூறு ஏற்பட்டால் மலேசியத் தமிழர்கள் அதற்கு அரணாக நிற்பார்கள் என்பதையும் நாங்கள் கூறிக்கொள்கிறோம்.